Wednesday, December 7, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 51 - 60



 51. (476-486)
த⁴ர்மகு³ப்³த⁴ர்மக்ருத்³த⁴ர்மீ ஸத³ஸத்க்ஷரமக்ஷரம்॥
அவிஜ்ஞாதா ஸஹஸ்த்ராம்ஶுர்விதா⁴தா க்ருதலக்ஷண: ॥ 51 ॥

தர்மம்காத்து வெல்பவன்  தர்மத்தைத்தான் கொள்பவன்
தர்மவழியில் யாரும்செல்ல ஊக்கம்தனைக்  கொடுப்பவன்
தர்மத்தை ஓர்கருவியாகக் கொண்ட நல்லசிறப்பவன்
என்றும்நிலைத்து இருப்பவன் தீயவர்க் கிலாதவன்
நல்லோரைக்கை விடாதவன் தீயோரோடி லாதவன்
அறியவொண்ணா அறிவவன் ஆயிரக்கதிர் ஒளியவன்
செயலின்பலனை அளிப்பவன் செயலில்ஊக்கம் அளிப்பவன்
உயர்ந்தபக்தர் கொள்வதாகக் குணங்கள்அருளும் பொருளிவன்

52. (487-495)
க³ப⁴ஸ்தினேமி: ஸத்த்வஸ்த:² ஸிம்ஹோ பூ⁴த மஹேஶ்வர: ।
ஆதி³தே³வோ மஹாதே³வோ தே³வேஶோ தே³வப்⁴ருத்³கு³ரு: ॥ 52 ॥

எதிலுமுள்ள ஆத்துமம் அதனுள்ஒளியின்  சூக்குமம் 
திறத்தில்சிறந்த சிம்மமாம் உயர்வுமிகுந்த அரசுமாம்
உறையும்உலகில் பிறந்தயாவும் போற்றுகின்ற தலைவனாம்
முதலில்பிறந்த கடவுளாம் முடிவுமற்ற திடமுமாம்
நுதலில்தோன்றி  ஒளிருகின்ற த்யானம்தனின் பலனுமாம்
கடவுளர்க்கு கடவுளாம் கடவுள்தன்னின் பொருளுமாம்
முதலும்முடிவும் அற்றதான உலகில்சிறந்த குருவுமாம்

53. (496-504)
உத்தரோ கோ³பதிர்கோ³ப்தா ஜ்ஞானக³ம்ய: புராதன: ।
ஶரீர பூ⁴தப்⁴ருத்³ போ⁴க்தா கபீன்த்³ரோ பூ⁴ரித³க்ஷிண: ॥ 53 ॥


உயிரைக்காக்கும் ஒருவனாம் பசுவைக்காத்த சிறுவனாம்
ஞானத்தீயில் ஒளிர்பவன் ஆதியாய் நிலைத்தவன்
படைத்தயாவும் நிறைந்ததாய் விராடமான உடலவன்
ஆனந்தத்தில் திளைப்பவன் அலையும் மனதிலாதவன்
வேண்டுமெதையும் அளவிலாது வழங்குநல் தயாபரன்
      
54. (505-514)
ஸோமபோம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: ।
வினயோ ஜய: ஸத்யஸன்தோ⁴ தா³ஶார்ஹ: ஸாத்வதாம் பதி: ॥ 54 ॥
  
யாகம்தன்னில் இட்டிடும்  சோமபானம் கொள்ளுவான்
மோகம்கொண்ட அசுரர்விடுத்து தேவர்கொள்ள வழங்கினான்
மோகினியாய் அம்ருதமாம் அவர்துணையாய் விளங்கினான்
யாரையுமே வெல்லுவான் பக்தருடன்  உள்ளுவான்
யாரையுமே அடக்குவான் பக்தருள் ளடங்குவான்     
சத்தியத்தின் உருவமாம் புத்திகொள்ளும் பொருளுமாம்
சாதுக்களின் தலைவனாம் சுத்தசத்வ ரூபனாம்

     55. (515-523)
ஜீவோ வினயிதா ஸாக்ஷீ முகுன்தோ³மித விக்ரம: ।
அம்போ⁴னிதி⁴ரனந்தாத்மா மஹோத³தி⁴ ஶயோன்தக: ॥ 55 ॥

வாழ்வளிக்கும் விழுமையாம்  பாதைகாட்டும் பாதனாம்
சாட்சிபூதமானவன் மோக்ஷம்நல்கும் போதனாம்
வேகம்கொண்ட தேகனாம் மோகம்கொல்லும் நாதனாம்
நீரில்துயிலும் நாரணன் நீருமான ஓரணை
ஊழில்முடியும் உயிர்கள்சென்று தங்குகின்ற ஒர்துணை

56. (524-533)
அஜோ மஹார்ஹ: ஸ்வாபா⁴வ்யோ ஜிதாமித்ர: ப்ரமோத³ன: ।
ஆனந்தோ³னந்த³னோனந்த:³ ஸத்யத⁴ர்மா த்ரிவிக்ரம: ॥ 56 ॥


நெஞ்சி லெண்ணமானவன் நெஞ்சிலெண்ணற்க் குரியவன்
மிஞ்சிடவே ஒருவரற்ற தலைவனாகச் சரியவன்
நெஞ்சிலெழும் மும்மலங்கள் கடந்துநிற்கும் பெரியவன்
நெஞ்சிலின்பம் தருவதற்கு இவனைவிட எவருளர்
ஆனந்தத்தின் உருவவன் ஆனந்தத்தைத்  தருபவன்
நிறைந்ததாக முழுமையான ஆனந்தமே தானிவன்

57. (534- 541)
மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதி³னீபதி: ।
த்ரிபத³ஸ்த்ரித³ஶாத்⁴யக்ஷோ மஹாஶ்ருங்க:³ க்ருதான்தக்ருத் ॥ 57 ॥

கருத்தமேனிக் குரியவன் பெருத்தஅறிவின் குருவவன் 
படைத்துமே இருப்பவன் படைத்ததா  யிருப்பவன்
படைத்திருக்கு முலகம்யாவும் காத்திருப் பவன்இவன்
மூவுலகை மூவடியால் அளந்ததிரி  விக்ரமன்
பிரளயம்தனில் காத்துநின்ற மத்ஸயமும்   ஆனவன்
உயிர்கள்தன்னை எடுக்கவரும் இறப்பினுக்கே இறப்பிவன்

58. (542- 550)
மஹாவராஹோ கோ³வின்த:³ ஸுஷேண: கனகாங்க³தீ³ ।
கு³ஹ்யோ க³பீ⁴ரோ க³ஹனோ கு³ப்தஶ்சக்ர க³தா³த⁴ர: ॥ 58 ॥

உலகம்மீள் வராஹம்நீ கோகுலத்தின் கண்ணன் நீ
உலவும்நல் குணங்கள்கொண்ட படையைப்போன்ற உடலும்நீ
விரையின்தங்க கங்கணன் மறைந்துதோன்றும் ஓர்கணன்
புரிபடாத புதிரும்நீ  எரிந்துநிற்கும் கதிரும்நீ
எறிவதாக தண்டுகொண்ட சக்கரத்தின் கரனும்நீ

59. (551- 562)
வேதா⁴: ஸ்வாங்கோ³ஜித: க்ருஷ்ணோ த்³ருட:⁴ ஸங்கர்ஷணோச்யுத: ।
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமனா: ॥ 59 ॥

காக்கும்இறை ஆண்மையாம்   போகும்பகையும் ஆண்மையால்
வேதம்பகுத்த வ்யாசனாம் திடத்தில்நிலைத்த *கோசனாம்
கவர்ந்திழுப்பான் யாரையும் பிறந்திராத தெய்வமாய்
சிறந்திருப்பான் என்றுமே சிறப்பினின் றிரங்கிடான்
விரிந்திருக்கும் குடையுமாய் நிழல்கொடுக்கும் மரமுமாய் 
பிறந்திருக்கும்  யாவையும் போற்றிஅடை காப்பவன்
நிறைந்திருக்கும் எங்கணும் விரிந்திருக்கும் அறிவினன்

*கோசம்=Sheath

60. (563- 571)
ப⁴க³வான் ப⁴க³ஹானந்தீ³ வனமாலீ ஹலாயுத:⁴ ।
ஆதி³த்யோ ஜ்யோதிராதி³த்ய: ஸஹிஷ்ணுர்க³திஸத்தம: ॥ 6௦ ॥

போற்றித்தொழத் தகுந்தவன் பெற்றதெய்வத் தன்மையால்
பக்தர்நெஞ்சம் தன்னிலே இனிமைகொண்டு சேர்ப்பவன்
மாலைகளால்  நிறைந்தவன்  கலப்பைஏந்தும் கரத்தவன்
மோட்சமருளும் இறையவன் சூரியனில் ஒளியவன் 
காட்சிதரும் வண்ணம்வேண்டிக் கொள்ளத்தக்க வழியவன்

       __________________

Prev        First          Next

No comments:

Post a Comment